மிருகக் காட்சி சாலை
நாங்களும் மகனுக்குத் (மாசிலன், 3+) தமிழ்ப் புத்தகமெல்லாம் வாசிச்சுக் காட்டுறோம். ஆனாலும் ஆங்கிலப் புத்தகங்கள் கவருமளவுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் அவரைக் கவர்வதில்லை. இதற்கு முக்கியக் காரணம் புத்தகங்களின் வடிவமைப்பு என்றுதான் சொல்வேன். தெளிவற்ற படங்கள், உறுதியற்ற காகிதங்களும் அட்டைகளும், சில சமயங்களில் எரிச்சலூட்டும் உள்ளடக்கங்கள் இப்படியாக இருந்தால் பிள்ளைகளுக்கு ஆர்வம் குறைவதில் வியப்பில்லைதானே? சரி, நாமாகவே மாசிலனுக்குச் சில புத்தகங்களைச் செய்யலாமா என்றொரு எண்ணம் கிளம்பி, ஒரு பாடலொன்றை எடுத்துத் தட்டச்சி, படங்களை எடுத்துப் போட்டு, அச்செடுத்துக் கட்டிக் கொடுத்திருக்கிறேன். இதை மாசிலன் ஓரளவுக்கு விரும்பிப் படிக்கிறார். இதைப் போல் மேலும் செய்ய எண்ணம். இந்தப் பாடலை ஒரு பக்கத்துக்கு இரண்டிரண்டு வரிகளாக அந்தந்த விலங்குப் படங்களுடன் powerpoint ஆகச் செய்திருக்கிறேன். வேண்டுவோர் இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்; அது வேலை செய்யவில்லையென்றால் எனக்கு ஒரு மின்னஞ்சல் (sundarappaa at யாஹ¥ டாட் காம்) அனுப்பினால் பெற்றுக் கொள்ளலாம்.
மிருகக் காட்சி சாலை
அம்மா அப்பா அழைத்துச் சென்றார்
அங்கே ஓரிடம்
அங்கிருந்த குயிலும் மயிலும்
ஆடத் தொடங்கின
பொல்லா நரியும் புனுகுப் பூனையும்
எல்லாம் இருந்தன
குட்டி மான்கள் ஒட்டைச்சிவிங்கி
கூட நின்றன
குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து
குர் குர் என்றது
யானை ஒன்று காதைக் காதை
ஆட்டி நின்றது
முதலைத் தலையைத் தூக்கிப் பார்த்து
மூச்சு விட்டது
கரடி கூட உறுமிக் கொண்டே
காலைத் தூக்கிற்று
சிங்கம் புலி எல்லாம் கண்டேன்
கண்டும் பயமில்லை
சூரனைப் போல் நின்றிருந்தேன்
சிறிதும் அஞ்சவில்லை
சென்று வந்த இடம் உனக்குத் தெரியவில்லையா?
மிருகக் காட்சி சாலைதானே வேறு ஒன்றுமில்லை!
(இந்த ஈழப் பாடலுக்கு நன்றி: ஜானா மற்றும் குடும்பத்தினர்)
posted by சுந்தரவடிவேல் at 11/21/2005 11:47:00 AM 4 comments